சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
2.016
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அயில் ஆரும் அம்புஅதனால் புரம்மூன்று பண் - இந்தளம் (எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி) மணவாளநாயகர் யாழ்மொழியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=3iP3choR434 |
5.087
திருநாவுக்கரசர்
தேவாரம்
பட்டம் நெற்றியர்; பாய் புலித்தோலினர்; பண் - திருக்குறுந்தொகை (எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி) மணவாளநாயகர் யாழ்மொழியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=PAXv1MaV-14 |
7.007
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
மத்தயானை ஏறி, மன்னர் சூழ பண் - இந்தளம் (எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி) அயிராவதேசுவரர் வாசமலர்க்குழன்மாதம்மை) |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.016  
அயில் ஆரும் அம்புஅதனால் புரம்மூன்று
பண் - இந்தளம் (திருத்தலம் எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி) ; (திருத்தலம் அருள்தரு யாழ்மொழியம்மை உடனுறை அருள்மிகு மணவாளநாயகர் திருவடிகள் போற்றி )
திருமணம் கைகூட ஓத வேண்டிய பதிகம்
அயில் ஆரும் அம்புஅதனால் புரம்மூன்று எய்து குயில் ஆரும் மென்மொழியாள் ஒருகூறுஆகி, மயில் ஆரும் மல்கிய சோலை மணஞ்சேரிப் பயில்வானைப் பற்றி நின்றார்க்கு இல்லை, பாவமே. | [1] |
விதியானை, விண்ணவர்தாம் தொழுது ஏத்திய நெதியானை, நீள்சடைமேல் நிகழ்வித்த வான் மதியானை, வண்பொழில் சூழ்ந்த மணஞ்சேரிப் பதியானை, பாட வல்லார் வினை பாறுமே. | [2] |
எய்ப்புஆனார்க்கு இன்புஉறு தேன் அளித்து ஊறிய இப்பால் ஆய் எனையும் ஆள உரியானை, வைப்பு ஆன மாடங்கள் சூழ்ந்த மணஞ்சேரி மெய்ப்பானை, மேவி நின்றார் வினை வீடுமே. | [3] |
விடையானை, மேல் உலகுஏழும் இப் பார் எலாம் உடையானை, ஊழிதோறுஊழி உளதுஆய படையானை, பண் இசை பாடு மணஞ்சேரி அடைவானை, அடைய வல்லார்க்கு இல்லை, அல்லலே. | [4] |
எறி ஆர் பூங்கொன்றையினோடும் இள மத்தம் வெறி ஆரும் செஞ்சடை ஆர மிலைந்தானை, மறி ஆரும் கை உடையானை, மணஞ்சேரிச் செறிவானை, செப்ப வல்லார்க்கு இடர் சேராவே. | [5] |
மொழியானை, முன் ஒரு நால்மறை ஆறுஅங்கம் பழியாமைப் பண் இசைஆன பகர்வானை; வழியானை; வானவர் ஏத்தும் மணஞ்சேரி இழியாமை ஏத்த வல்லார்க்கு எய்தும், இன்பமே. | [6] |
எண்ணானை, எண் அமர் சீர் இமையோர்கட்குக் கண்ணானை, கண் ஒருமூன்றும் உடையானை, மண்ணானை, மா வயல் சூழ்ந்த மணஞ்சேரிப் பெண்ணானை, பேச நின்றார் பெரியோர்களே. | [7] |
எடுத்தானை எழில் முடிஎட்டும் இரண்டும் தோள கெடுத்தானை, கேடு இலாச் செம்மை உடையானை, மடுத்து ஆர வண்டு இசை பாடும் மணஞ்சேரி பிடித்து ஆரப் பேண வல்லார் பெரியோர்களே | [8] |
சொல்லானை; தோற்றம் கண்டானும், நெடுமாலும், கல்லானை; கற்றன சொல்லித் தொழுது ஓங்க வல்லார், நல் மா தவர், ஏத்தும் மணஞ்சேரி எல்லாம் ஆம் எம்பெருமான்; கழல் ஏத்துமே! | [9] |
சற்றேயும் தாம் அறிவு இல் சமண்சாக்கியர் சொல் தேயும் வண்ணம் ஓர் செம்மை உடையானை, வற்றாத வாவிகள் சூழ்ந்த மணஞ்சேரி பற்றாஆக வாழ்பவர்மேல் வினை பற்றாவே. | [10] |
கண் ஆரும் காழியர்கோன் கருத்து ஆர்வித்த தண் ஆர் சீர் ஞானசம்பந்தன் தமிழ்மாலை, மண் ஆரும் மா வயல் சூழ்ந்த மணஞ்சேரி, பண் ஆரப் பாட வல்லார்க்கு இல்லை, பாவமே. | [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5.087  
பட்டம் நெற்றியர்; பாய் புலித்தோலினர்;
பண் - திருக்குறுந்தொகை (திருத்தலம் எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி) ; (திருத்தலம் அருள்தரு யாழ்மொழியம்மை உடனுறை அருள்மிகு மணவாளநாயகர் திருவடிகள் போற்றி )
இந்நாளில் குத்தாலம் (கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தலம்) என்று அழைக்கப்படும் தலம், பண்டைய நாட்களில் துருத்தி என்று அழைக்கப்பட்டது. துருத்தி தலத்திற்கு பதினெட்டு கி.மீ. தொலைவில் உள்ள தலம் திருமணஞ்சேரி. இந்த தலத்தில் மீது அப்பர் பிரான் அருளிய குறுந்தொகைப் பதிகம் நமக்கு கிடைத்துள்ளது.
பட்டம் நெற்றியர்; பாய் புலித்தோலினர்; நட்டம் நின்று நவில்பவர்-நாள்தொறும் சிட்டர் வாழ் திரு ஆர் மணஞ்சேரி எம் வட்டவார் சடையார்; வண்ணம் வாழ்த்துமே! | [1] |
துன்னு வார்குழலாள் உமையாளொடும் பின்னு வார் சடைமேல் பிறை வைத்தவர், மன்னு வார் மணஞ்சேரி மருந்தினை, உன்னுவார் வினை ஆயின ஓயுமே. | [2] |
புற்றில் ஆடு அரவு ஆட்டும் புனிதனார்; தெற்றினார் புரம் தீ எழச் செற்றவர்- சுற்றின் ஆர் மதில் சூழ் மணஞ்சேரியார்; பற்றினார் அவர் பற்று, அவர்; காண்மினே! | [3] |
மத்தமும் மதியும் வளர் செஞ்சடை முத்தர்; முக்குணர்; மூசு அரவம் அணி சித்தர்; தீவணர்-சீர் மணஞ்சேரி எம் வித்தர்; தாம் விருப்பாரை விருப்பரே. | [4] |
துள்ளு மான்மறி, தூ மழுவாளினர்; வெள்ள நீர் கரந்தார், சடைமேல் அவர்;- அள்ளல் ஆர் வயல் சூழ் மணஞ்சேரி எம் வள்ளலார்; கழல் வாழ்த்தல் வாழ்வு ஆவதே. | [5] |
நீர் பரந்த நிமிர் புன்சடையின்மேல் ஊர் பரந்த உரகம் அணிபவர்- சீர் பரந்த திரு மணஞ்சேரியார்; ஏர் பரந்து அங்கு இலங்கு சூலத்தரே. | [6] |
சுண்ணத்தர்; சுடுநீறு உகந்து ஆடலார்; விண்ணத்து அம் மதி சூடிய வேதியர்- மண்ணத்து அம் முழவு ஆர் மணஞ்சேரியார்; வண்ணத்து அம் முலையாள் உமை வண்ணரே. | [7] |
துன்ன ஆடையர், தூ மழுவாளினர்; பின்னும் செஞ்சடைமேல் பிறை வைத்தவர்- மன்னு வார் பொழில் சூழ் மணஞ்சேரி எம் மன்னனார்; கழலே தொழ வாய்க்குமே. | [8] |
சித்தர், தேவர்கள், மாலொடு, நான்முகன் புத்தர் தேர் அமண்கையர்-புகழவே, மத்தர்தாம் அறியார், மணஞ்சேரி எம் அத்தனார்; அடியார்க்கு அல்லல் இல்லையே. | [9] |
கடுத்த மேனி அரக்கன், கயிலையை எடுத்தவன், நெடு நீள் முடிபத்து இறப் படுத்தலும், மணஞ்சேரி, அருள்! எனக் கொடுத்தனன், கொற்றவாளொடு நாமமே. | [10] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7.007  
மத்தயானை ஏறி, மன்னர் சூழ
பண் - இந்தளம் (திருத்தலம் எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி) ; (திருத்தலம் அருள்தரு வாசமலர்க்குழன்மாதம்மை உடனுறை அருள்மிகு அயிராவதேசுவரர் திருவடிகள் போற்றி )
மத்தயானை ஏறி, மன்னர் சூழ வருவீர்காள்! செத்த போதில் ஆரும் இல்லை; சிந்தையுள் வைம்மின்கள்! வைத்த உள்ளம் மாற்ற வேண்டா; வம்மின், மனத்தீரே! அத்தர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே . | [1] |
தோற்றம் உண்டேல், மரணம் உண்டு; துயரம், மனை வாழ்க்கை; மாற்றம் உண்டேல், வஞ்சம் உண்டு; நெஞ்ச-மனத்தீரே! நீற்றர், ஏற்றர், நீலகண்டர், நிறை புனல் நீள் சடை மேல் ஏற்றர், கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே . | [2] |
செடி கொள் ஆக்கை சென்று சென்று தேய்ந்து ஒல்லை வீழாமுன், வடி கொள் கண்ணார் வஞ்சனையுள் பட்டு மயங்காதே, கொடி கொள் ஏற்றர், வெள்ளை நீற்றர், கோவண ஆடை உடை அடிகள், கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே . | [3] |
வாழ்வர் கண்டீர், நம்முள் ஐவர்; வஞ்ச மனத்தீரே! யாவராலும் இகழப்பட்டு, இங்கு அல்லலில் வீழாதே, மூவராயும் இருவராயும் முதல்வன் அவனே ஆம் தேவர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே . | [4] |
அரித்து நம்மேல் ஐவர் வந்து, இங்கு ஆறு அலைப்பான் பொருட்டால், சிரித்த பல் வாய் வெண்தலை போய் ஊர்ப்புறம் சேராமுன், வரிக் கொள் துத்தி வாள் அரக்கர் வஞ்சம் மதில் மூன்றும் எரித்த வில்லி எதிர்கொள்பாடி என்பது அடைவோமே . | [5] |
பொய்யர் கண்டீர், வாழ்க்கையாளர்; பொத்து அடைப்பான் பொருட்டால் மையல் கொண்டீர்; எம்மோடு ஆடி நீரும், மனத்தீரே! நைய வேண்டா; இம்மை ஏத்த, அம்மை நமக்கு அருளும் ஐயர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே . | [6] |
கூசம் நீக்கி, குற்றம் நீக்கி, செற்றம் மனம் நீக்கி, வாசம் மல்கு குழலினார்கள் வஞ்சம் மனை வாழ்க்கை ஆசை நீக்கி, அன்பு சேர்த்தி, என்பு அணிந்து ஏறு ஏறும் ஈசர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே . | [7] |
இன்பம் உண்டேல், துன்பம் உண்டு; ஏழை, மனை வாழ்க்கை; முன்பு சொன்ன மோழைமையால், முட்டை மனத்தீரே! அன்பர் அல்லால், அணி கொள் கொன்றை அடிகள் அடி சேரார்; என்பர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே . | [8] |
தந்தையாரும் தவ்வையாரும் எள்-தனைச் சார்வு ஆகார்; வந்து நம்மோடு உள் அளாவி வானநெறி காட்டும் சிந்தையீரே! நெஞ்சினீரே! திகழ் மதியம் சூடும் எந்தை கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே . | [9] |
குருதி சோர ஆனையின் தோல் கொண்ட குழல் சடையன்; மருது கீறி ஊடு போன மால், அயனும், அறியா, சுருதியார்க்கும் சொல்ல ஒண்ணா, சோதி; எம் ஆதியான்; கருது கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே . | [10] |
முத்து நீற்றுப் பவள மேனிச் செஞ்சடையான் உறையும் பத்தர் பந்தத்து எதிர்கொள்பாடிப் பரமனையே பணியச் சித்தம் வைத்த தொண்டர் தொண்டன்-சடையன் அவன் சிறுவன், பத்தன், ஊரன்-பாடல் வல்லார் பாதம் பணிவாரே. | [11] |